வெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 9 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தாவை வெளியேற்றியது.
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுப்மான் கில் இருவரும் முதல் சில ஓவர்களில் தடுமாறினர். கில், 16 பந்துகளில் 9 ரன் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து ராபின் உத்தப்பா வந்தார். இருவரும் அதிரடியில் ஈடுபட்டனர். 29 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் விளாசிய லின், ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக்கை வெறும் 3 ரன்னில் வெளியேற்றினார் மலிங்கா. அவரைத் தொடர்ந்து வந்த ரஸல், இந்த முறை ஏமாற்றினார். வந்த வேகத்திலேயே அவரது விக்கெட்டை எளிதாக எடுத்தார் மலிங்கா. இதனால் அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அடுத்து வந்த நிதிஷ் ராணா, உத்தப்பாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 13 பந்தில் 3 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 40 ரன்னில் 20-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளையும் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.
அடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. குயின்டான் டி காக் 30 ரன்னில் கேட்ச் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா 48 பந்தில் 55 ரன்னுடனும் சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
9-வது வெற்றியை பெற்ற மும்பை இண்டியன்ஸ் அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.