"தோனிக்காக அடுத்த டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்" - ஸ்ரீசாந்த் ஆசை !
அடுத்த உலகக் கோப்பை டி20 போட்டியை தோனிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மாநில கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த். 2007 உலகக்கோப்பை டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது இவரது பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு ஸ்ரீசாந்த் பவுலிங்கில் சிம்மசொப்பனமாக இருந்தார்.
இந்நிலையில் "கிரிக்கெட்அடிக்டர்" இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ள ஸ்ரீசாந்த் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் அதில் "தோனி நிச்சயமாக டி20 உலகக் கோப்பையை விளையாட வேண்டும். அதற்குள்ளாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என நினைக்கிறேன். அப்போது நாம் தோனி அண்ணனின் அசத்தலான பேட்டிங்கை காணலாம். தோனி இப்போது மிகவும் அமைதியாக இருக்கிறார் என மக்கள் கருதுகிறார்கள், ஆனால் அவருக்கு எப்போது எதனைச் செய்ய வேண்டும் எனத் தெரியும்" என்றார்.
மேலும் தொடர்ந்த ஸ்ரீசாந்த் "தோனி இந்த நாட்டுக்கு விளையாடுகிறார் அதுமட்டுமல்லாமல் ராணுவத்தில் கெளரவ பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு அரசியலில் ஆர்வமில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். அவருக்குச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கிறது. 2011 உலகக் கோப்பை முடிந்த பின்பு சச்சின் டெண்டுல்கரை எப்படி தோள்களின் மீது சுமந்து சுற்றினோமோ அப்படி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்பு தோனிக்கு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.