இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு கட்ட வேண்டிய சந்தாத் தொகையான ரூ.1800 செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக தோனி இணைந்தார். இதற்கான தொகையை பெற ராஞ்சியில் உள்ள தோனி வீட்டுக்கு சென்ற அதிகாரி ரூ. 10,000 மட்டும் பெற்றார். இதற்கு ஜி.எஸ்.டி வரி ரூ. 1,800 வசூலிக்க தவறினார். இதுகுறித்து ஊடகங்களில் ரூ.1800 சந்தா கட்டாத தோனி என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ரசிகர்கள் சிலர் தோனிக்காக ரூ.1800 கட்டுவதற்காக அம்மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு சென்றனர். ஆனால் சங்கம் அதனை வாங்க மறுத்துவிட்டது. இது குறித்து இப்போது பேசியுள்ள அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜய் சாஹே "இந்த விவகாரம் முடிந்துவிட்டது. மீதித் தொகை கட்டப்பட்டுவிட்டது. எனவே இது குறித்து மேலும் பேசுவதற்கு ஏதுமில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் "கணக்கு வழக்குகளை சரிபார்க்கும்போதுதான் இந்தப் பாக்கி தெரியவந்தது. இது எங்களுடைய தவறுதான். இப்போது பாக்கி தொகை வந்துவிட்டது விவகாரம் முடிந்துவிட்டது. தோனியை வைத்து விளம்பரம் தேடும் சிலர் அந்தத் தொகையை கட்ட வந்தனர். அதனால் அதுபோன்ற செயல்களை நான் ஊக்குவிப்பதில்லை" என்றார் சாஹே.