இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.
அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. ‘எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்த சர்ச்சையால் இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது தாற்காலிக முடிவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்துள்ளது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இதனால் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் ஷமி விளையாடுகிறார்.
ஷமி மீதான கிரிக்கெட் ஸ்பார்ட் பிக்ஸிங் புகார் முடிவுக்கு வந்துவிட்டாலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி அளித்த புகார் இன்னும் முடிவுக்கு வரவில்லை.