கடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

கடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

கடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!
Published on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது. 

ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். ரஹானே சதம் அடித்தார். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியை விட 335 ரன்கள் பின் தங்கியது. 

இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன்களைச் சேர்க்கத் தடுமாறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுழல் பந்துவீச்சாளர் நதீம், புரூயினையும் நிகிடியையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் அந்த அணி 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com