"அதே பிட்சை யூஸ் பண்ணுங்க, கதறட்டும்!" - விவியன் ரிச்சர்ட்ஸ் சாடல்

"அதே பிட்சை யூஸ் பண்ணுங்க, கதறட்டும்!" - விவியன் ரிச்சர்ட்ஸ் சாடல்
"அதே பிட்சை யூஸ் பண்ணுங்க, கதறட்டும்!" - விவியன் ரிச்சர்ட்ஸ் சாடல்

கடந்த டெஸ்ட் போட்டியில் உபயோகிக்கப்பட்ட அதேபோன்ற பிட்சை கடைசிப் போட்டிக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் வீடியோவில் பேசிய விவியன் ரிச்சர்ட்ஸ் "கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்ற பிட்ச் குறித்து என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. ஏன் இந்தக் கேள்விகள் வருகிறது என்பதே எனக்கு புரியவில்லை. ஏனென்றால் பிட்ச் தொடர்பான அழுகைகள், கதறல்களை தொடர்ந்து கேட்க முடிகிறது. அப்படி என்ன பிரச்னை இருக்கிறது எனத் தெரியவில்லை".

மேலும் பேசிய அவர் "யாரெல்லாம் இப்போது அழுகிறார்களோ அவர்கள் இப்போது ஒன்றை உணர வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பல மைதானங்களில் பவுன்சர்களிலும் ஸ்விங் பந்துகளிலும் பேட்ஸ்மேன்கள் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டார்கள். பின்பு அதுபோன்ற பந்துவீச்சுக்கும் பிட்சுக்கும் பழகி இப்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் தைரியமாக வேகப்பந்தை எதிர்கொள்கிறார்கள். இப்போது நடக்கும் விவகாரத்தை அதன் மறுபக்கமாகவே நான் பார்க்கிறேன்" என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

தொடர்ந்து பேசிய அவர் "பேட்ஸ்மேன்களின் திறனை சோதிப்பதால்தான் இதற்கு டெஸ்ட் மேட்ச் என பெயர் வைக்கப்பட்டது. அதை பலரும் மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்ப தயாராக வேண்டும். ஏனென்றால் இந்தியா சுழற்பந்துவீச்சின் தாயகம். அங்கிருக்கும் பிட்ச் அதற்கு சாதகமாகத்தான் இருக்கும். இப்போது உட்கார்ந்து அழுவது, புகார் கூறுவதெல்லாம் சரியான அணுகுமுறை இல்லை. இந்தியா மிகச்சிறப்பாக பயன்படுத்தி அட்டகாசமாக விளையாடுகிறது. அதனை நான் ரசிக்கிறேன்" என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

இறுதியாக பேசிய விவியன் ரிச்சர்ட்ஸ் "என்னைப் பொறுத்தவரை அடுத்தப் போட்டிக்கும் இதேபோல இருக்கும் பிட்சை பயன்படுத்த வேண்டும். அதில் இங்கிலாந்து வீரர்கள் சவாலாக நினைத்து சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் இந்தக் கதறல்கள் குறையும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com