இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை

இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே பல வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும். இந்திய அணி எப்போதெல்லாம் ஜெயிக்கிறதோ அப்போதெல்லாம் பல 'அறிவார்ந்த' கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள் அவர்கள். அதில் இப்போது முன்னிலையாக இருப்பவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். ஒருகாலத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்தான் இந்திய வீரர்களுக்கு எதிராகவும், இந்திய அணிக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தார். இப்போது அவர் டெல்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் எதுவும் வாய் திறப்பதில்லை.

ஆனால், பாவம் மைக்கேல் வாகனுக்கு ஐபிஎல் வாய்ப்பு இல்லாத கடுப்போ என்னவோ, தொடர்ந்து இந்திய கிரிக்கெட் மீது அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவதூறாக மட்டுமின்றி, பல நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் அபத்தமாகவே இருந்து இருக்கின்றன. அதவும் சில இந்திய வீரர்கள் மீது மைக்கேல் வாகன் கூறிய விமர்சனம் தனி மனித வன்மமாகவும் இருப்பதை கவனிக்க முடிகிறது.

யார் இந்த மைக்கேல் வாகன்?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 1999-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் மைக்கேல் வாகன். இங்கிலாந்து அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5719 ரன்களும், 18 சதங்களும், 18 அரை சதங்களும் விளாசியுள்ளார் மைக்கேல் வாகன். அதேபோல 86 ஒருநாள் பேட்டிகளில் விளையாடி 1982 ரன்களை மட்டுமே எடுத்து 16 அரை சதங்களும் அடித்த மிக சுமாரான பேட்ஸ்மேனாகவே திகழ்ந்திருக்கிறார் அவர். 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் வாகன்.

அவரின் தலைமையிலான அணி 19 ஆண்டுகளுக்கு பின்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றது. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் வென்றது. பின்பு 2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின்பு ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும், 2008 தென் ஆ்பபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினார். சில அபூர்வமான சாதனைக்கு சொந்தக்காரராகவும் வாகன் திகழ்ந்திருக்கிறார் வாகன்.

அதாவது ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் சதமும் மற்றொரு இன்னிங்ஸில் 'டக் அவுட்' ஆகி பெயர் பெற்றவர்தான் இந்த வாகன். அதேபோல ஒருநாள் போட்டியில் சதமே அடித்ததில்லை. அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் கோல்டன் டக் அவுட்டுகளை பெற்றவர்களில் மைக்கேல் வாகனின் சாதனையும் அபாரமானது. இதன் பின்பு 2009-இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார். அதன் பின்பு வர்ணனையாளராக இருந்து பல 'ஆக்கபூர்வமான' அறிய கருத்துகளை பேசி வருகிறார்.

இந்தியா மீதான முதல் தாக்குதல்!

2011 ஆம் ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது. அந்தத் தொடர் இந்தியாவுக்கு மோசமாகவே இருந்தது. ராகுல் டிராவிட் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. விவிஎஸ் லஷ்மண் மோசமாக விளையாடிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஆனால், அதைக் கூட பொறுக்க முடியவில்லை போல மைக்கேல் வாகனால். அந்தப் போட்டியில் பிராட் பந்துவீச்சில் லஷ்மண் பேட் எட்ஜ் ஆனது. ஆனால் அம்பயர் மூன்றாவது நடுவர் முடிவுக்கு சென்றார்.

எட்ஜ் ஆனதா இல்லையா என்பதை பார்க்க 'ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதில் பந்து எட்ஜாகவில்லை என தெளிவாக தெரிந்தது. அடுத்த சில பந்துகளில் லஷ்மணே அவுட்டாகிவிட்டார். ஆனாலும் மைக்கேல் வாகன் புத்திசாலித்தனமான கருத்து ஒன்றை தெரிவித்தார். அது "விவிஎஸ் லஷ்மண் தன்னுடைய பேட்டில் வேசலின் திரவியத்தை தடவியதால் ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பத்தில் பந்து எட்ஜ் ஆனது தெரியவில்லை" என்றார். இதற்கு கிரிக்கெட் உலகில் இருந்து அப்போதே பலத்த எதிர்ப்புகள் வந்தன.

ஏனென்றால் கிரிக்கெட் உலகில் ஜென்டில்மேன்கள் சிலர். அதில் லஷ்மணும் ஒருவர். எனவே அப்போதே பல தரப்பினரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் மைக்கேல் வாகன். அப்போது தொடங்கிய மைக்கல் வாகன் வன்மத்தின் பயணம் இப்போதும் தொடர்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இந்தியா ஒயிட் வாஷ் ஆகும் என எந்த சுபதினத்தில் சொன்னாரோ தெரியவில்லை, இந்தியா அபாரமாக விளையாடி டெஸ்ட் தொடரை வென்று வாகனின் முகத்தில் கரியைப் பூசியது.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார். அதற்கு "இந்தியாவில் நிறைய டெஸ்ட் விளையாடினார் இன்னும் நிறைய சதங்கள் அடிப்பார் ஜோ ரூட்" என்றார். ஆனால் அதன் பின்பு ஜோ ரூட்டால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதுதான் சோகம். ஆனால் இப்படியெல்லாம் பேசிவிட்டு நிறைய ஃபீல் செய்திருக்கிறார் மைக்கேல் வாகன்.

“அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவியதும் ஆஸ்திரேலியா இந்தத் தொடரை வெல்லும் என நான் சொல்லி இருந்தேன். இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள் இந்திய வீரர்கள்" என தனக்குதானே முட்டையை வீசிக்கொண்டார் வாகன்.

எவ்வளவு அடிச்சாலும் நான் தாங்குவேன்டா என்ற ரீதியில் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார் மைக்கேல் வாகன். அகமதாபாத் பிட்ச் குறித்து பேசும்போது, "இந்தியாவை கேள்வி கேட்க ஐசிசிக்கு துப்பில்லை" என்ற ரீதியில் பேசியுள்ளார். இவையெல்லாம் எங்கே போய் முடியப்போகுதா என தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகவே தெரிகிறது. இதே இங்கிலாந்து அணியின் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் திறமையை பாராட்டுகிறார்கள். ஆனால், பாவம் மைக்கேல் வாகன் போன்றோர் இன்னமும் ஆதிக்க மன நிலையில் இருந்தே மாறவேயில்லை என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com