மெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!
மெல்போர்னில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெற்றியை நோக்கி நடைபோடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா அபார சதம் அடித்தார். விராத் கோலி 82 ரன்களும் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 76 ரன்களும் எடுத்தனர். ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் ஹசல்வுட், லியான் தலா ஒரு விக்கெட் டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர் களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸும் கேப்டன் டிம் பெயினும் அதிகப்பட்சமாக தலா, 22 ரன் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 151 ரன் னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார்.
மெல்போர்ன் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சு இது. அதோடு இந்த வருடத்தில் வெளிநாட்டில் அதிக விக்கெட் (45) வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார்.
இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய வீரர்களாலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர முடிய வில்லை. விஹாரி 13 ரன்னிலும் புஜாரா, விராத் கோலி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். புஜாராவுக்கு இந்த ஆண்டின் மூன்றாவது டக் அவுட் இது.
துணை கேப்டன் ரஹானே 1 ரன்னிலும் ரோகித் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலும் ரிஷாப் பன்ட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். மயங்க் 42 ரன்னும் ரிஷாப் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 106 ஆக இருந்தபோது, டிக்ளேர் செய்தார், இந்திய கேப்டன் விராத்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டையும் ஹசல்வுட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சின் 292 ரன் முன்னிலை யுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்னை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்ச்சும் மார்க்கஸ் ஹாரிஸும் களமிறங்கினர். ஹாரிஸ் 13 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்ச் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதையடுத்து உஸ்மான் கவாஜாவும் மார்ஷும் ஆடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை, 14 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்துள்ளது.
இன்னும் 355 ரன் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதாலும் பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச் மாறியிருப்பதாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.