சதத்தை நோக்கி மயங்க் ! வலுவான நிலையில் இந்தியா
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி முன்னேறி வருகிறார். துணை கேப்டன் ரஹானே 35 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராத் கோலி டக் அவுட் ஆனார்.
இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இந்திய தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்களில் அபு ஜயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மயங்க் அகர்வாலுடன் இணைந்தார் புஜாரா. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 43 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் விளாசினார். அவர் 54 ரன்கள் எடுத்திருந்தபோது, அபு ஜயத் பந்துவீச்சில் சைஃப் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அபு ஜயத் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார் விராத்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிதானமாக ஆடிவரும் மயங்க் அகர்வால் 91 ரன்களுடனும், ரஹானே 35 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.