பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யாவால் தப்பித்த மும்பை அணி...! MI VS KXIP மேட்ச் ரிவ்யூ

பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யாவால் தப்பித்த மும்பை அணி...! MI VS KXIP மேட்ச் ரிவ்யூ
பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யாவால் தப்பித்த மும்பை அணி...! MI VS KXIP மேட்ச் ரிவ்யூ

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சா‌ப் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. வெற்றியை எட்டும் முனைப்போடு ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியடைந்திருந்தது. இதனால் இன்றைய போட்டியில் பட்டையை கிளப்பும் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் முதல் ஓவரை பஞ்சாப் அணியின் காட்றல் வீசினார்.

முதல் நான்கு பந்துகளை தேய்த்த அதிரடி நாயகன் டி காக் ஐந்தாவது பந்தில் போல்டாகி டக் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சூரியக்குமார் யாதவும் இஷான் கிஷனும் சொற்ப ரன்களில் அவுட் ஆகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டான சூரியக்குமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஜொலிக்கவில்லை. இஷான் கிஷன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 99 ரன்களில் அவுட் ஆனார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு அவர் ஆளானார் என்பது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டார். அதன்படி அதிரடியாக அவர் விளையாடினாலும் 28 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

மும்பை அணி இடையில் தடுமாறினாலும் அதன் கேப்டன் ரோகித் சற்று நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். 45 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸ்சர்கள் அடித்து 70 ரன்களை குவித்தார் ரோகித். அதன்பின் சமி ஓவரில் நீசம் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.

இதைத்தொடர்ந்து கைக்கோர்த்த பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யா கூட்டணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுவரை பந்துகளுக்கு ஏற்ற ரன்களை மட்டுமே குவித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன்பிறகு வேறு லெவலில் ஸ்கோரை ஏற்றியது. பொல்லார்டு காட்டுத்தனமாக ஆடி பஞ்சாப் அணியினருக்கு வானவேடிக்கை காட்டினார். 20 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்து 47 ரன்களை குவித்தார். 19வது ஓவரின் கடைசி 3 பந்துகளை பவுண்டரிகளுக்கும், 20வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளை ஸ்டேடியத்திற்கும் விரட்டியடித்தார் பொல்லார்டு. ஹர்த்திக் பாண்டியாவும் அவரது பங்கிற்கு 11 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். இதில் 3 பவுண்ட்ரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பவுலிங்கை பொருத்தவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. காட்றல், சமி, கவுதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். காட்றல் மட்டும் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். முருகன் அஸ்வினுக்கு பதிலாக புதிதாக களமிறக்கப்பட்ட கவுதம் 4 ஓவர்களுக்கு 45 ரன்களை கொடுத்திருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். மயங்க் அகர்வால் தொடக்கத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அது வெகுநேரம் ஜொலிக்கவில்லை. கடந்த அட்டத்தில் சதம் விளாசிய மயங்க், இந்த ஆட்டத்தில் 18 பந்துகளுக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். அதன் பின் வந்த கருன் நாயர் டக் அவுட் ஆக, கேப்டன் கே. எல். ராகுலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டானார். கே.எல்.ராகுல் கீப்பிங் சைடு பாலை தட்டிவிட நினைத்து போல்டானார்.

இதையடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸரகளும் அடங்கும். இதனால் ஆறுதல் அடைந்த ரசிகர்களுக்கு அவரது அவுட் மூலம் மீண்டும் ஏமாற்றமே திரும்பியது. அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல், நீசம், சர்ஃபராஸ் கான், பிஸ்நொய் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் மட்டுமே கவுதமால் ஒரு சிக்ஸரை பார்க்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை பொருத்தவரை பேட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். குர்னல் பாண்ட்யாவும் போல்ட்டும் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி திகழ்கிறது.

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், பூரான், மேக்ஸ்வெல்லை விட்டால் டீமில் அடிப்பதற்கு ஆளே இல்லை என்ற நிலை பரிதாபம். சிறப்பாக பந்து வீசுவார் என நம்பிக்கை வைத்து முருகன் அஸ்வினுக்கு பதிலாக கவுதமை எடுத்த கே.எல்.ராகுலின் எண்ணமும் வீண் என்றே தோன்றுகிறது. ரோகித்தின் நிதானமும் பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யாவின் சரவெடியும் மும்பை அணியின் வெற்றிக்கு பலமாக அமைந்துள்ளது. ஒருவேளை பொல்லார்டும் ஹர்த்திக் பாண்ட்யாவும் அதிரடியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும். ஏனென்றால் கடைசி நான்கு ஓவர்களில்தான் இருவரும் அதிரடியை கையில் எடுத்தனர். அதற்கு முன்பவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 120 ஆகவே இருந்தது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர் போன்ற வீரர்கள் சற்று நிதானமாக ஆடியிருந்தால் ஒருவேளை இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com