கடைசி வரை போராடிய லக்னோ - இறுதியில் வெற்றி வாகை சூடிய ராஜஸ்தான்!

கடைசி வரை போராடிய லக்னோ - இறுதியில் வெற்றி வாகை சூடிய ராஜஸ்தான்!
கடைசி வரை போராடிய லக்னோ - இறுதியில் வெற்றி வாகை சூடிய ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடிய போதிலும் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது லக்னோ அணி.

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் ஓப்பனர்களாக களமிறங்கினர். பட்லர் நிதானமாக ஆட, பவுண்டரிகளாக விளாசி அதிரடியாக விளையாடத் துவங்கினார் படிக்கல். ஆனால் ஆவேஷ் கான் பந்துவீச்சில் 13 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் ஹோல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி அதிர்ச்சி அளித்தார்.

நிலைத்து நின்ற படிக்கலும் கவுதம் பந்துவீச்சில் அவுட்டாக, வான் டெர் டசனும் அதே கவுதம் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்த ராஜஸ்தான், 67 ரன்களை குவிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதாவது 25 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகள்! அடுத்து இணைந்த ஹெட்மேயர், அஸ்வின் இருவரும் பொறுமையாக விளையாடி ஸ்கோரை உயர்த்த துவங்கினர். அஸ்வின் 28 ரன்கள் குவித்த நிலையில் ரிடயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஹெட்மேயர் அரைசதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி.

166 ரன்கள் இலக்கை நோக்கி லக்னோ தரப்பில் ஓப்பனர்களாக கேப்டன் கேஎல் ராகுல், டி காக் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்திலேயே ராகுலை போல்டாக்கி “கோல்டன் டக்” ஆக்கி வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ட்ரெண்ட் போல்ட். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதமையும் எல்.பி.டபுள்யூ ஆக்கி அடுத்த அதிர்ச்சியை அளித்தார் போல்ட். பின்னர் வந்த ஹோல்டரும் 8 ரன்களில் அவுட்டாக 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னோ. அடுத்ததாக டி காக்குடன் ஜோடி சேர்ந்து தீபக் ஹூடா பொறுமையாக ரன் சேர்க்கத் துவங்கினார். ஆனால் அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 25 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் சென்னிடம் க்ளீன் போல்டானார் ஹூடா.

சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பதோனி, 5 ரன்களில் சஹால் சுழலில் சிக்கி அவுட்டானார். நிலைத்து நின்று ஆடிய டி காக்கும் 39 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிய அந்த அணிக்கு ஆறுதலாக அதிரடி காட்டி விளையாடத் துவங்கினார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இதனால் மீண்டும் ஆட்டம் பரபரப்பாக சிக்ஸர் மழை பொழியத் துவங்கினார் ஸ்டாய்னிஸ். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அறிமுக வீரர் குல்தீப் சென் பந்துவீச வந்தார். பினிஷிங்கில் கில்லியான ஸ்டாய்னிஸ் திணறிப்போகும் அளவுக்கு அபாரமாக பந்துவீசினார் குல்தீப் சென். முதல் 4 பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிக்கனமாக வீசி அவர் அசத்த, லக்னோவின் தோல்வி உறுதியானது.

கடைசி 2 பந்துகளில் ஆறுதல் பவுண்டரி, சிக்ஸர்களை ஸ்டாய்னிஸ் விளாசிய போதிலும், 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவில் பேட்டிங்கை ஆட்டம் காணச் செய்த சஹால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். லக்னோ அணியின் துவக்க வீரர்கள் பொறுமையாக விளையாடி இருந்தால், போட்டியின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com