ஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் லாங்கர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதை அடுத்து, கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேன்கிராஃப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமனும் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் கூடியது. இதில் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்தது. ‘புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது பற்றி முடிவு செய்துள்ளோம். யாரை தேர்வு செய்வது என்பது பற்றி முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்தது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி, ஆண்ட்ரூ மேக்டொனால்ட் ஆகியோர் இந்தப் பயிற்சியாளர் போட்டியில் இருந்தனர். இந்நிலையை ஜஸ்டின் லாங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.