’பஞ்சாப்’ அஸ்வின் விவகாரம்: பிரீத்தி ஜிந்தா- சேவாக் மோதல்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கும் அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக்குக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, தொழிலதிபர் மோகித் பர்மன் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். இந்த அணியின் வீரராக களமிறங்கிய வீரேந்திர சேவாக், இப்போது அந்த அணியின் ஆலோசகராகச் செயல்படுகிறார். வீரர்கள் ஏலத்தில் இருந்து அணியை வழிநடத்துவது வரை அவரது பங்கு உள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் அணி எதிர்கொண்டது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 159 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மட்டுமே கடைசி வரை நின்று 95 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது.
இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட்டானதும் கேப்டன் அஸ்வின் மூன்றாவது வீரராக களமிறங்கி டக் அவுட் ஆனார். போட்டி முடிந்ததும், கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை எப்படி அந்த வரிசையில் இறக்கலாம் என்று சேவாக்கிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டார் பிரீத்தி. இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ‘ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பதில் சேவாக்கை அடிக்கடி குறை கூறி வருகிறார் பிரீத்தி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம். இது முதல் முறையல்ல’ என்றனர்.
அணியின் மற்ற உரிமையாளர்களிடம், கிரிக்கெட் பற்றி பிரீத்தி என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சேவாக். பிரீத்தி ஜிந்தா தொடர்ந்து இப்படி நடந்துகொள்வதால் இந்த வருடத்துடன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து சேவாக் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.