விராத் விளாசலில் தென்னாப்பிரிக்கா சரண்டர்: டர்பனில் முதல் வெற்றி!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் விராத் கோலியின் சதத்தால் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
டர்பனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 120 ரன்கள் குவித்தார். குயின்டன் டி காக் 34 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 37 ரன்களும் எடுத்து ஆக்கப்பூர்வ பங்களிப்பை செலுத்தினர்.
பின்னர் 270 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றமின்றி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 20 ரன்களும், ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடி 112 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 33 ஆவது சதம் இதுவாகும். கோலிக்கு ஈடு கொடுத்து விளையாடிய ரஹானே 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 45. 3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சதம் கண்ட விராத் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
டர்பன் நகரில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இது. அடுத்த போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை செஞ்சுரியனில் நடக்கிறது.