மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் கீரோன் பொல்லார்டுக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில், 15 வருடங்களாக கிரிக்கெட் வாழ்க்கையில் அங்கம் வகித்து வரும் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் ஓய்வு பெறுகிறேன். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னேற விரும்புவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்து வகையிலும் எப்போதும் ஆதரவளிப்பேன். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் எனது கனவை நனவாக்கியதற்கு மனமார்ந்த நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் பொல்லார்டு. இவருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் மற்றும் யுவராஜ் சிங் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர். 3-வது வீரராக பொல்லார்டு அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2706 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 101 ஆட்டங்களில் 1569 ரன்கள் எடுத்துள்ள பொல்லார்டு, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2010 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அவர், 184 போட்டிகளில் 3350 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.