FIFA world cup 2026 | கத்தார் அணியில் கேரள வீரர்!
தனது 19-ஆவது வயதிலேயே, கத்தாரின் 26 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்ததன் மூலம், கால்பந்து வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார் தாசின் முகமது ஜம்ஷித்; இத்தகைய மிகப்பெரிய விளையாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலையாளி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இந்தியர்களுக்கு, குறிப்பாக கேரளாவுக்கு ஒரு வரலாற்றுப் பெருமிதம் கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான கத்தார் அணியின் 26 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில், கேரளாவின் கண்ணூரைப் பூர்வீகமாகக் கொண்ட 19 வயது இளம் முன்கள வீரர் தஹ்சின் முகமது ஜம்ஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் தேசிய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடத் தேர்வாகியுள்ள முதல் இந்திய வம்சாவளி வீரர் இவர்தான். தோஹாவில் பிறந்து வளர்ந்த தஹ்சின், அங்குள்ள புகழ்பெற்ற ஆஸ்பயர் அகாடமியில் பயின்று, அல்-துஹைல் கிளப் அணிக்காக விளையாடி அசத்தியவர். கடந்த 2024இல் கத்தார் சீனியர் அணியில் அறிமுகமான இவர், தற்போது உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இவரைப் போலவே ஆஸ்திரேலிய அணியில் இலங்கையின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை என்ற வீரரும் தேர்வாகியுள்ளார். இந்திய அணி விளையாடாவிட்டாலும், உலகக் கோப்பை மைதானத்தில் இந்திய வம்சாவளி வீரர்களின் கால்த்தடம் பதியப்போவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது,

