\
12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்? 

12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்? 

12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்? 
Published on

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. 

எனவே இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டி அபார வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தினார்.  

இந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு 12 ஆண்டுகள் கழித்து கேன் வில்லயம்சனிற்கு நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி மூலம் கிடைத்தது. இந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. 

எனவே ஆட்டம் அடுத்த நாளான இன்று தொடரப்பட்டது. ஆகவே இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் பழைய வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். எனினும் இன்றைய போட்டியில் இந்திய அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 12 வருடங்களுக்கு முன்பு அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு வில்லயம்சன் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். 

இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அத்துடன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்து போனது. மேலும் தோனி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றப் போது விராட் கோலி அந்த அணியில் இடம்பெற்று இருந்தார். அதேபோல நடப்பு உலகக் கோப்பை தொடரை விராட் கோலி வென்று இருந்தால் அந்த அணியில் தோனி இடம் பெற்றிருந்துப்பார். அது ஒரு பெரிய வரலாறாக இருந்திருக்கும். விராட் கோலி இதனையும் தவறவிட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com