“திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்” - பங்களாதேஷ் அணிக்கு கைஃப் புகழாரம்
பங்களாதேஷைப் பொறுத்தவரை முஸ்தாபிசூர் மற்றும் ஷாகிப் ஆகியோர் மிகவும் அருமையாக பந்து வீசியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் அடித்தார். ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை பார்த்து எப்படியும் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 104 (92) ரன்களில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 77 (92) ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 26 (27) ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் 48 (41) ரன்களிலும் தோனி 35 (33) ரன்களிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷை பொறுத்தவரை முஸ்தாபிசூர் 5 விக்கெட்டுகளையும் ஷாகிப், ரூபெல், சர்கர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்நிலையில், பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “பங்களாதேஷைப் பொறுத்தவரை முஸ்தாபிசூர் மற்றும் ஷாகிப் ஆகியோர் மிகவும் அருமையாக பந்து வீசினர். இந்தியா 350 ரன்களை நெருங்குவதைப் போல தோற்றமளித்தது. ஆனால் இறுதியில் பங்களாதேஷ் தங்கள் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியது” எனத் தெரிவித்துள்ளார்.