’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா!
’டெல்லி அணியில் இருந்து இந்த நிலையில் விலகுவது கடினமானதுதான்’ என்று அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது அபாரமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் இதுவரை ஆடியுள்ள 12 போட்டிகளில் 25 விக்கெட்டுக்களை வீழ்த்தி அவர்தான் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார். இதற்கான ‘பர்பிள்’ தொப்பி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. பின்னர் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அந்த அறிக்கை யை டெல்லி அணி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ரபாடாவை நாட்டுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி ரபாடா கூறும்போது, ‘’இந்த நிலையில், டெல்லியை அணியை விட்டு விலகுவது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். டெல்லி அணிக்காக விளையாடியது நல்ல அனுபவம். ஓய்வறையிலும் களத்திலும் எனக்கு இந்த தொடர் சிறப்பானதாக அமைந்தது. இந்த முறை டெல்லி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்க வீரர்கள் லுங்கி நிகிடி, ஸ்டெயின், அன்ரிச் நோர்ஜே ஆகியோர் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.