ஆஸ்திரேலியாதான் வெல்லும்...! - மோடியை வம்புக்கு இழுத்த ஆஸி.பிரதமர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண ஏற்கெனவே 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மார்ச் 8 ஆம் தேதி நாளை உலக மகளிர் தினம் என்பதால் இந்த இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. இத்தொடரின் அரையிறுதி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றதால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
மேலும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்று இறுதிக்கு முன்னேறியது. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்காட் மோரிசன் டேக் செய்திருந்த ட்வீட்டில் " ஹாய் நரேந்திர மோடி, மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மெல்பர்னில் நடைபெறுகிறது. இரு அணிகளுமே தலைசிறந்தவைதான், இந்தப் போட்டியைக் காண பெரும் கூட்டம் இருக்கும். மிகப் பெரிய இரவாக இருக்கும். விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆனால் இறுதியாக ஆஸ்திரேலியாதான் வெல்லும்" எனக் கூறியுள்ளார்.