'டி20 உலகக் கோப்பையில் கோலி ஆட்டத்த பாருங்க'- நம்பிக்கையோடு அடித்துக்கூறும் இர்பான் பதான்
ஆசியக் கோப்பை தொடரைவிட, டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி முக்கியமானவராக இருப்பார் எனக் கூறுகிறார் இர்பான் பதான்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி, சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். விராட் கோலியின் பங்களிப்பு அடுத்தடுத்து வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரைவிட டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி முக்கியமானவராக இருப்பார் எனக் கணித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.
இதுகுறித்து இர்பான் பதான் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''விராட் கோலி என்ன நினைத்துக் கொண்டிருப்பார், எந்த மாதிரியான மனநிலையுடன் வந்து விளையாடுவார் என்ற சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம், ஆசியக் கோப்பை தொடர் அவருக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி அணியில் முக்கியமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடுபவர். அதனால்தான் சொல்கிறேன் ஆசியக் கோப்பை தொடரைவிட இந்தாண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி முக்கியமானவராக இருப்பார். அவர் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறார். அதனால் ஆசியக் கோப்பையில் கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என்று உறுதியாக நம்பலாம்'' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி -வக்கார் யூனிஸ் சூசகம்