ஐபிஎல் திருவிழா: டிக்கெட் வாங்க இரவிலேயே குவிந்த ரசிகர்கள்
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. டிக்கெட்டுகளை பெறுவதற்கு நள்ளிரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கவுன்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்கு கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாக வும், நேரடி கவுன்டர் மூலமும் இன்று காலை 11:30க்கு தொடங்குகிறது.
இந்நிலையில் நேரடி கவுன்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் வரை டிக்கெட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, நேற்று சென்னை வந்தார். மற்ற வீரர்களும் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே சில வீரர்கள் கடந்த சில நாட்களாக சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.