ஐபிஎல், பிளே ஆஃப் ஆட்டம்: போட்டி நேரம் மாற்றம்
ஐபிஎல், ’பிளே ஆப்’ சுற்று போட்டிகளை அரை மணி நேரம் முன்னதாகத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 ஆம் தொடங்கி, நடந்து வருகிறது. இந்த போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சனி, ஞாயிறுகளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. லீக் சுற்று போட்டிகள், விரைவில் முடிவைடந்து அடுத்து ’பிளே ஆப்’ சுற்று மற்றும் இறுதி போட்டி நடக்க இருக்கிறது.
ஒரு போட்டி, 3 மணி 20 நிமிடங்களில் முடியவேண்டும் என்பது ஐ.பி.எல். விதி. ஆனால் இந்த சீசனில் சில போட்டிகள் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தன. இதனால் மெதுவாக பந்துவீசியதற்காக விராத் கோலி, அஸ்வின், ரஹானே, ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதிக நேரம் எடுத்துக் கொள்வதற்கு ரசிகர்களு ம் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நள்ளிரவைத் தாண்டி போட்டி நடப்பதைத் தவிர்க்க, அரை மணி நேரம் முன்பாகவே பிளே ஆப் மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் போட்டிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
இதே போல ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் தொடங்கும் மகளிர் டி20 போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கப்பட இருக்கிறது.