இந்திய அணியில் கால்பதிக்கும் தமிழர்கள்... - கதவைத் திறக்கும் ஐபிஎல்..!
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நால்வரும் இந்திய அணியில் நுழைவதற்கான வாய்ப்பை ஐபிஎல் தான் பெற்று தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது
இப்போது இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். இதில் அஸ்வினும், வாஷிங்டன் சுந்தரும் ஏற்கெனவே இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். இதில் புதுமுகங்கள் யார் என்றால் வருண் சக்கரவர்த்தியும், நடராஜனும்தான். அதில், கொல்கத்தா நைட்ரைடஸ் அணிக்காக விளையாடும் வலது கை சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார்.
தோனி உள்ளிட்ட மிக முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் வலுவான அணியாக கருதப்படும் டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசரவைத்தார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் பெங்களூர் அணிக்காக விளையாடி ஆல்ரவுண்டராக சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைவான ரன்களையே ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்து வருகிறார். நடப்பு சீசனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பவுலிங் எக்கனாமி வெறும் 5.72 மட்டுமே. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வருண் சக்ரவர்த்தி இதுவரை விளையாடியதில்லை. அதேபோல அவர் ரஞ்சிப் போட்டிகளிலும் தமிழக அணி சார்பாக விளையாடவில்லை.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள 29 வயதாகும் தமிழக வீரர் நடராஜன் மிக அற்புதமாகப் பந்துவீசி, குறிப்பாக யார்க்கர் பந்துகளை வீசி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். சேலத்தை சேர்ந்த நடராஜனும் தமிழக ரஞ்சி அணியில் விளையாடியதில்லை. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதற்கு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு ஐபிஎல்தான் ஏற்படுத்திக் கொடுத்தது. 2010 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசினார் அஸ்வின். இதனையடுத்து அந்தாண்டே இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வினுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு அவர் இந்திய அணிக்காக செய்தது எல்லாம் சாதனைதான்.
இந்த வாய்ப்பு எல்லாவற்றுக்கும் மூலக்காரணமாக ஐபிஎல் உள்ளது. தமிழக மாவட்டங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் வைத்து அதன் மூலம் திறமையான இளைஞர்களை கண்டறிய வேண்டும் என்றும், அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

