கேப்டன்சியில் இறுதி முடிவை எடுத்த பெங்களூரு அணி - வெளியான புதிய அப்டேட்

கேப்டன்சியில் இறுதி முடிவை எடுத்த பெங்களூரு அணி - வெளியான புதிய அப்டேட்
கேப்டன்சியில் இறுதி முடிவை எடுத்த பெங்களூரு அணி - வெளியான புதிய அப்டேட்

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து, அந்த அணியின் நிர்வாகம் இறுதி முடிவை எடுத்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஐபிஎல் போட்டியில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் மோதுகிறது.

ஐபிஎல் போட்டி துவங்க இன்னும் 17 நாட்களே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் நாளுக்கு ஒரு அப்பேட் கொடுத்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் கூட தங்களது அணியின் கேப்டன்களை அறிவித்து விட்டன. ஆனால் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இருக்கும் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை.

பெங்களூரு அணியில் கேப்டன்சி பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்று வரும் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது அந்த அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டூ பிளசிஸ் பெங்களூ அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அணி நிர்வாகம் பாப் டூ பிளசிஸை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விராட் கோலி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூரு அணியின் முன்னாள் வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், அந்த அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்றும், அதுகுறித்த தகவல்களும் 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ம் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com