தொடர்ந்து சொதப்பும் ராயுடு - இனியாவது மாற்றுவாரா தோனி?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து ரன் எடுக்க தடுமாறி வருகிறார்.
12வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சென்னை அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, 4வது போட்டியாக மும்பை அணியுடன் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர், 171 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதில் அம்பத்தி ராயுடு தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டமிழந்தார். வாட்சன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, சற்று நேரம் தாக்கு பிடித்த ரெய்னா 16 ரன்னில் வெளியேறினார்.
இந்தத் தொடரில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் 52 பந்துகளில் 28 ரன் எடுத்தார். ஆனால், இரண்டாவது போட்டியில் 5 பந்துகளில் 5 ரன்னும், மூன்றாவது போட்டியில் 8 பந்துகளில் ஒரு ரன்னும்தான் அடித்தார். இன்றைய போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
தொடர்ந்து சொதப்பி வரும் ராயுடுவை அடுத்தப் போட்டியிலாவது தோனி மாற்ற வேண்டும். அவருக்கு பதிலாக வேறு யாரையாவது தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். இல்லையென்றால், பின் களத்திலாவது அவரை இறக்க வேண்டும். ஷாம் பில்லிங்ஸ், முரளி விஜய் உள்ளிட்ட யாருக்கேனும் அவருக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கலாம்.