பட்டய கிளப்ப காத்திருக்கும் பஞ்சாப் ! மீண்டும் வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் போட்டிகளின் போது சில சர்ச்சைகளும் அரங்கேறிவருகின்றன. குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மண்கட் முறையில் பட்லரை அவுட் ஆக்கியது பெரும் விவாத பொருளாக அமைந்தது. அதேபோல மும்பை அணியின் மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பாலாக இருந்ததை நடுவர் கவனிக்கவில்லை. இதனால் பெங்களுர் அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தது. இச்சம்பவமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த சர்ச்சைகளில் இடம் பெற்றிருந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மோதவுள்ளன.
மும்பை அணியை பொருத்தவரை இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை தனது வெற்றி பாதையை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். அத்துடன் ரோகித் சர்மா மற்றும் டி காக் கடந்த போட்டியில் சிறப்பான தொடக்கம் அளித்தது போல இந்தப் போட்டியிலும் விளையாடுவார்கள் என்று மும்பை அணியின் ரசிகர்கள் நம்புகின்றனர்.
பஞ்சாப் அணியும் அதேபோல ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. கடந்தப் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் பஞ்சாப் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பவேண்டும் என்று நோக்கத்தோடு இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. மேலும் கடந்த போட்டியில் கெயில் மற்றும் ராகுல் சரியாக விளையாடவில்லை. அதனால் அவர்கள் இன்று அதிரடி காட்டுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் வருணிற்கு பதிலாக தமிழ்நாட்டு வீரர் முருகன் அஸ்வின் களமிறங்குகிறார். மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்தப் போட்டியில் விளையாடிய அதே அணியை இந்தப் போட்டியிலும் களமிறங்கிறது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் 22 முறை மோதியுள்ளது. அவற்றில் பஞ்சாப் 10 போட்டிகளிலும் மும்பை 12 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மொஹாலியில் நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் 4 போட்டியில் மும்பை அணியும் 3 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.