ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 155 ரன்கள் குவித்துள்ளது.
ஐபில் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் டெல்லி கேபிடலஸ் அணியும் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷா மற்றும் ஷிகர் தவான் சரியான தொடக்கம் அளிக்கவில்லை. ஷா 4 ரன்களுக்கும் தவான் 7 ரன்களுக்கும் வெளியேறினர். இதனால் டெல்லி அணி 3 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த முன்ரோ மற்றும் ஸ்ரேயஸ் அயர் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தனர். முன்ரோ 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதன்பின்னர் ஸ்ரேயஸ் அயர் மற்றும் ரிஷப் பந்த் சற்று நிதானமாக ஆடினர். இதனால் டெல்லி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் அயர் 5 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து புவனேஸ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த்தும் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் கடைசி 4 ஒவர்களில் டெல்லி அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இறுதியில் அக்ஸர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் கலில் அஹமத் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.