ஹைதராபாத் கனவை கரைத்தது மழை!

ஹைதராபாத் கனவை கரைத்தது மழை!
ஹைதராபாத் கனவை கரைத்தது மழை!

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வார்னர், தவான் களம் இறங்கினர். இருவரும் மெதுவாகவே ஆடினர். ஸ்கோர் 25 ரன்னாக இருந்த போது தவான், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் பலியானார். அவர் 11 ரன் (13 பந்து, ஒரு பவுண்டரி) எடுத்திருந்தார். அடுத்து வில்லியம்சன், வார்னருடன் சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 75 ரன்னாக இருந்த போது (12 ஓவர்) வில்லியம்சன் 24 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அவுட்டானர்.

அடுத்த ஓவரில் வார்னர் 37 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் போல்டாக, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து விஜய் சங்கர், யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார். யுவராஜ் 9 ரன், விஜய் சங்கர் 22 ரன், நமன் ஓஜா 16 ரன் எடுத்து அவுட்டாகினர். கடைசி 2 பந்து மீதம் இருக்கையில் மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் தொடர்ந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. பிபுல் ஷர்மா 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் குல்டர் நைல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், போல்ட், பியூஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து டக்வொர்த் முறைப்படி கொல்கத்தா அணியின் வெற்றி இலக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என மாற்றி அமைக்கப்பட்டது. 3 விக்கெட்களை இழந்த நிலையில் கொல்கத்தா அணி வெற்றியை வசமாக்கியது. காம்பீர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன் எடுத்தார்.

3 விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா பந்து வீச்சாளர் குல்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com