விராத் கோலி இரட்டை சதம்: இந்திய அணியின் ஸ்கோர் 606/6
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரட்டை சதமடித்தார்.
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முரளி விஜய்யும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10-வது சதத்தையும் புஜாரா 14-வது சதத்தையும் அடித்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் விராத் கோலி, தன் பங்குக்கு அரை சதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121 ரன்களுடனும், கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய விராத் கோலி இரட்டை சதமடித்தார். இது அவருக்கு 19வது டெஸ்ட் சதமாகும். இதையடுத்து 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெரேரா வீசிய பந்தில் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது 6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 606 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும், சாஹா 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.