ஆட்டம் காட்டும் இந்தூர் பிட்ச்.. சுழலில் மிரட்டும் ஆஸி.,! 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

ஆட்டம் காட்டும் இந்தூர் பிட்ச்.. சுழலில் மிரட்டும் ஆஸி.,! 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆட்டம் காட்டும் இந்தூர் பிட்ச்.. சுழலில் மிரட்டும் ஆஸி.,! 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது முதல் நாளிலேயே ஆட்டம் காட்டிவருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹால்கர் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலையில் இருந்துவரும் நிலையில், அடுத்த 2 போட்டிகளில் மீண்டு வந்து தொடரை சமன் வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம்கண்டு விளையாடி வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ரோகித் சர்மா!

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் சென்றதை போலவே செல்ல நினைக்கிறோம். ஆடுகளமானது கொஞ்சம் வறட்சியாக காட்சியளிக்கிறது. நாங்கள் இங்கு நிறைய போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான ஆடுகளம். இங்கு நீங்கள் எப்போதும் போட்டியில் விழிப்புடன் இருந்துகொண்டே இருக்க வேண்டும், நாங்கள் எங்கள் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்வது சரியான முடிவா?

கடந்த 2 போட்டிகளில் மட்டும் அஸ்வின் ஒருவரே 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். வேகப்பந்துவீச்சை விட சுழற்பந்துவீச்சுக்கே இந்தூர் ஆடுகளமானது சாதகமாக இருந்திருக்கிறது. இது போன்ற ஆடுகளங்களில் டார்கெட்டை சேஷிங் செய்வது என்பது நிச்சயம் கடினமான ஒன்றாக தான் இருக்கும். அதன்படி பார்த்தால் முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடியானது தான் என்றாலும், டிபண்ட் செய்யுமளவிற்கான ரன்களையும் ஆடுகளத்தில் இருந்து நீங்கள் பெறவேண்டும் என்பது முக்கியமான ஒன்று இல்லையா. அந்தவகையில் தற்போது இந்தியா, தன் சொந்தமுடிவால் போட்டியின் முதல் செஸ்ஸனில் சரிவை சந்தித்து வருகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த விக்கெட்டுகள்! மாயாஜாலம் காட்டும் சுழல்!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும், தொடக்கத்திலேயே அடித்து ஆடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை என்பது எவ்வளவு வேகமாக ரன்களை சேர்த்துகொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவாக ரன்களை தேத்திக்கொள்ளும் விதத்திலேயே இருந்தது. வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இரண்டு வீரர்களும், பவுண்டரிகளாக விரட்டி முதல் 5 ஓவர்களில் 26 ரன்களை சேர்த்தனர்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் எந்த உதவியும் இல்லாத நிலையில், 6ஆவது ஓவரிலேயே ஸ்பின்னரை எடுத்துவந்தார், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். முதல் ஸ்பின் ஓவரை வீசிய குனேமன்னிற்கு ஆடுகளத்தில் நல்ல டர்னிங் கிடைத்தது. தொடர்ச்சியாக நான்குபந்துகளை டாட் பாலாக எதிர்கொண்ட ரோகித் சர்மா, கடைசிபந்தை பவுண்டரிக்கு விரட்டும் முயற்சியில் இறங்கி வந்து அடிக்க முயல, அதிகமாக சுழல் ஆன பந்து நேராக விக்கெட் கீப்பரின் கைகளுக்கு சென்றது. ரோகித் சர்மா 12 ரன்களுக்கு ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேற, ஸ்பின்னர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி அசத்தியது ஆஸ்திரேலிய அணி.

அடுத்தடுத்து வெளியேறிய கில், புஜாரா!

பின்னர் அடுத்த ஓவரை வீச வந்த குனேமன் சுப்மன் கில்லை வெளியேற்ற, தொடர்ந்து களமிறங்கிய ஜடேஸ்வர் புஜாராவை, அபாரமான ஆஃப் ஸ்பின் மூலம் போல்ட்டாக்கி வெளியேற்றினார் நாதன் லயன். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவை களத்திற்கு அனுப்பியது. விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் அணியை மீட்டு எடுத்து செல்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அடுத்த ஓவரை வீச வந்த நாதன் லயன் மீண்டும் ஜடேஜாவை வெளியேற்றினார். இந்த முறை நாதனை எதிர்கொண்ட ஜடேஜா பேக் ஃபுட்டில் அட்டாக்கிங் ஷாட் அடிக்க, ஃபார்வர்ட் பீல்டிங்கில் நின்றிருந்த குனேமன் அற்புதமான ஒரு கேட்சை பிடித்து ஜடேஜாவை வெளியேற்றினார்.

டோட் முர்பிக்கு மட்டும் தான் விக்கெட் கொடுப்பேன் என அவுட்டான விராட் கோலி!

தொடர்ந்து களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயரை குனேமன் போல்டாக்கி வெளியேற்ற, 46 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய தடுமாறியது. பின்னர் கைகோர்த்த விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் பரத் இருவரும் சீரான இடைவெளியில் ரன்களை பெற்றனர். தன்னுடைய டிபண்டிங் அணுகுமுறை மூலம் சிறப்பான தடுப்பாட்டத்தை விளையாடி வந்த விராட் கோலியை, கடந்த போட்டிகளை போன்று இந்த முறையும் டோட் முர்பி வெளியேற்றினார். ஏதோ முர்பி பந்துபோட வந்தால் மட்டும் தான் நான் அவுட்டாவே என்பது போல், டோட் முர்பியிடம் நிலைத்து நின்று ஆடியும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார் விராட் கோலி. 52 பந்துகளை சந்தித்த பிறகும் சுழலில் சிக்கிக்கொண்ட கோலி, 22 ரன்னில் வெளியேறினார்.

விராட் கோலி அவுட்டானதும் அட்டாக்கிங் செய்யும் விதமாக ஆடிய விக்கெட் கீப்பர் பரத் ஒரு சிக்சரை பறக்க விட, அடுத்த ஓவரில் வந்த நாதன் லயன் நீ வெளில போ பா என மீண்டும் விக்கெட்டை கைப்பற்றி வெளியேற்றினார். 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 84 ரன்களில் விளையாடி வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் களத்தில் நின்று ஆடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com