ஷபாலி வர்மா மீண்டும் அசத்தல்: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் அணி
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் "பாலோ ஆன்" செய்து இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தபோது தன்னுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதனையடுத்து இந்தியா தன்னுடைய இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பாக விளையாடினர்.
இதில் ஸ்மிரிதி மந்தனா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா 96 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய வீராங்கனைகளின் விக்கெட்டுகளை சீராக சரிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் கிரிக்கெட் விதிப்படி "பாலோ ஆன்" ஆன இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இதில் ஸ்மிரிதி மந்தனா 8 ரன்களில் அவுட்டானார். ஆனால் ஷபாலி வர்மா தொடர்ந்து விளையாடி அரை சதம் கடந்தார்.
இந்நிலையில் மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டு, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 56 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இன்னும் ஒருநாள் ஆட்டமே மிஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 82 ரன்கள் பின் தங்கியிருக்கிறது.