இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிவேக அரைசதம் பதிவு செய்தார். வெறும் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் அவர்.
அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் கபில் தேவ் (30 பந்துகள்), ஷர்துல் தாக்கூர் (31 பந்துகள்), சேவாக் (32 பந்துகள்) ஆகியோர் அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளனர்.
அதே போல இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசியவர்களில் ஷகீத் அஃப்ரிடிக்கு அடுத்ததாக பண்ட் உள்ளார். அஃப்ரிடி 26 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தார். அதே நேரத்தில் இயன் போத்தம் வசமிருந்த சாதனையை சமன் செய்துள்ளார் பண்ட்.
மேலும் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் 30-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பண்ட்.