தாமஸ் கோப்பையை வென்று இந்திய பேட்மிண்டன் அணி வரலாற்று சாதனை

தாமஸ் கோப்பையை வென்று இந்திய பேட்மிண்டன் அணி வரலாற்று சாதனை
தாமஸ் கோப்பையை வென்று இந்திய பேட்மிண்டன் அணி வரலாற்று சாதனை

14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இந்திய பேட்மிண்டன் அணி!

பாங்காக்கில் நடந்த தாமஸ் பேட்மிண்டன் தொடரில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி, இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. லக்ஷ்யா சென், சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த வரலாற்று சாதனை படைக்க உதவினர்.

தாமஸ் கோப்பை போட்டியின் 73 ஆண்டுகால வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு கூட இதுவரை இந்தியா சென்றதில்லை. ஆனால் இன்று சாம்பியன் பட்டத்தையே தனதாக்கி அசத்தியுள்ள்ளது இந்திய அணி. இது மட்டுமல்லாமல் சீனா, இந்தோனேசியா, ஜப்பான், டென்மார்க், மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு 6 வது நாடாக தாமஸ் கோப்பையை வென்றது இந்திய பேட்மிண்டன் அணி.

முதல்போட்டி:

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் போட்டியில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜின்டிங்கை வீழ்த்தி லக்ஷ்யா சென் இந்தியாவை 1-0 என முன்னிலைப்படுத்தினார். முதல் செட்டை 8-21 என இழந்த பிறகு, இரண்டாவது கேமில் சென் அட்டகாசமாக மீண்டெழுந்தார். ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜின்டிங்கை தோற்கடித்தார்.

2வது போட்டி:

2வது போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டே மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை வீழ்த்தியதால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

3வது போட்டி:

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை தோற்கடித்ததால், இந்தியா 3-0 என்ற கணக்கில் தாமஸ் கோப்பையை தனதாக்கியது. தாமஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக முன்னேறிய இந்திய அணி, ஒரு போட்டியை கூட இழக்காமல் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com