4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா! அணியை மீட்க போராடும் ஹர்திக் பாண்டியா!

4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா! அணியை மீட்க போராடும் ஹர்திக் பாண்டியா!
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா! அணியை மீட்க போராடும் ஹர்திக் பாண்டியா!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடரை முடிவு செய்யும் கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி இன்று பகல் 12 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழையின் பாதிப்பால் தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலனை வீசிய முதல் ஓவரிலேயே வெளியேற்றினார் இடதுகை பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங். விக்கெட் விழுந்தாலும் தொடர்ந்து அதிரடி காட்டினார் இன்பார்ம் வீரரான டெவான் கான்வே. 44 ரன்களில் வில்லியம்சனிற்கு பதிலாக களமிறக்கப்பட்ட சாப்மன் அவுட்டாகி வெளியேறியப் பின்னர், ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் பிலிப்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

86 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இவர்களின் கூட்டணியை 16 ஆவது ஓவரில் பிரித்தார் முகமது சிராஜ். 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 54 ரன்களுக்கு பிலிப்ஸ் அவுட்டாகி வெளியேற, 59 ரன்களில் விளையாடிய கான்வேவை வெளியேற்றினார் அர்ஸ்தீப் சிங். தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிக்காட்டிய அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இருவரும் ஒரே போட்டியில் முதல்முறையாக இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய இந்திய அணியின் ஓபனர் இஷான் கிஷனை 10 ரன்களில் வெளியேற்றினார் மில்னே. தொடர்ந்து பந்துவீச வந்த கேப்டன் டிம் சவுத்தி ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரையும் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் வெளியேற்றி அசத்த 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. அதன் பிறகு கைக்கோர்த்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய சூரியகுமார் இஷ் சோதி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேற, அணியின் வெற்றிக்காக போராடி வருகிறார் ஹர்திக் பாண்டியா.

9 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 30 ரன்களுடன் களத்தில் இருக்கிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com