உலகக் கோப்பை அணியில் கார்த்திக்கை கண்டிப்பா சேருங்க: காலிஸ்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்தை சேர்க்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. இதற் கான அணியை முடிவு செய்யும் வகையில் ஒவ்வொரு நாடும் தீவிரமாக உள்ளது. இதற்கிடையே, இந்திய அணியை வரும் 15 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார், யார் சேர்க்கப்படுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், 4 வது இடத்தில் களமிறங்கும் வீரரைத் தேர்வு செய்வதில் சரியான முடிவெடுக்க முடியவில்லை. அந்த இடத்துக்கு ராயுடு உட்பட பலரை மாற்றிப் பார்த்தும் சரியான வீரர்கள் அமையவில்லை.
விராத் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல்/ குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் மாற்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்களாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சேர்க்கப் போட்டி நிலவுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, கலீல் அகமது, குணால் பாண்ட்யா உட்பட சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்நிலையில் இப்போதுள்ள நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் தெரிவித்துள் ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’உலகக் கோப்பை போட்டிக்கு அனுபவம் உள்ள வீரர் தேவை. தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். அதோடு மிடில் ஆர்டரில் சிறப்பாக, பந்துகளை அதிகம் வீணாக்காமல் விளையாடக் கூடியவர். அந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர். இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரிய தொடரில் பங்கேற்கும் போது அனுபவ வீரர்கள்தான் தேவை. அதனால் அவரை சேர்க்க வேண்டும். அவரை சேர்க்காமல் விட்டால் அது வேடிக்கையாக ஆகிவிடும். நான் தேர்வாளராக இருந்தால் அவரை அணியில் சேர்ப்பேன்’’ என்றார்.