இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதலிடத்தை தக்கவைக்குமா இந்திய அணி
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை அணி இந்திய மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை. அந்த சோகத்தை போக்கும் முனைப்பில் இலங்கை வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி கடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அந்த உத்வேகத்துடன் இலங்கையை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொந்த மண்ணில் அந்த அணியை ஓயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியை வென்ற இலங்கை அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் மோசமான தோல்வியை தழுவியது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்வது எங்கள் கனவு எனக் கூறியிருந்தார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்திய வீரர்கள் மாலை நேர பயிற்சியை கைவிட்டுள்ளனர். கொல்கத்தாவில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

