இதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..!

இதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..!
இதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடிதான் வெற்றியை பெற்றது. ஆட்டம் முழுவதும் ஆப்கான் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஷோயிப் மாலிக்கின் அனுபவம் வாய்ந்த ஆட்டத்தால் வெற்றி பாகிஸ்தான் வசம் சென்றது. இந்த தொடர் முழுவதும் ஆப்கான் சிறப்பாகவே விளையாடி வருகிறது. குறைவான போட்டிகளிலே விளையாடியுள்ள ஆப்கான் தொடர்ச்சியாக முழுமையாக 50 ஓவர்களை பூர்த்தி செய்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அப்படிதான்.

முதலில் விளையாடிய ஆப்கான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 எடுத்தது. 258 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியில் பகர் ஜமான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை அடுத்து இமாம்-உல்-ஹாக், பாபர் அஜாம் ஜோடி சிறப்பாக விளையாடி 154 ரன்கள் சேர்த்தது. இமாம் 80, அஜாம் 66 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் ஷோயிப் மாலிக் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 

40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவரில் 75 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 7 விக்கெட் மீதமிருந்தது. ஆனால், கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. 5 விக்கெட் சாய்ந்துவிட்டது. அதன்பிறகு, ரன்கள் எடுக்கப்பட்டாலும், ரஷித் கான் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் எடுத்தார். இதனால், கடைசி கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 6 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தை சந்தித்த ஷோயிப் மாலிக் அதனை டாட் ஆக்கினார். கடைசி 5 பந்தில் 10 ரன் தேவை. ஆனால், 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் சிக்ஸர் என அசால்டாக போட்டியை முடித்து வைத்தார் சோயிப் மாலிக். பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது. சோயிப் 43 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட்கள் அடுத்தடுத்த வீழ்ந்த நேரத்தில் தனது அனுபவம் வாய்ந்த ஆட்டத்தால் பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார் சோயிப்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக சோயிப் மாலிக்கை பாராட்டி முன்னாள் கேப்டன் வாஷிம் அக்ரம் ட்விட் செய்துள்ளார். “அனுபவத்திற்கு சப்ஸ்டியூட் இல்லை. ஸ்பிரிட்டான ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் சோயிப் மாலிக் அதனை மீண்டும் நிரூபித்துள்ளார். தோனி செய்த பினிஷிங்கை போல. பந்துவீச்சாளரை பார்க்கும் போது சோயிப் முகத்தில் எவ்வித வெளிப்பாடும் இல்லை. அருமையான ஆட்டம்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

முன்னதாக, ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சி மேற்கொண்டது. அப்போது இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த சோயிப் மாலிக் முன்னாள் கேப்டன் தோனியிடம் பேசினர். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். தற்போது, சோயிப் மாலிப் நன்றாக ஆட்டத்தை பினிஷிங் செய்துள்ள நிலையில், தோனியிடம் இதற்காக தான் ஆலோசனை பெற்றாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com