“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங்கள்” - ஹர்பஜன் சிங் ஆறுதல்
இந்திய அணி இனிமேல்கூட வெற்றி பெறும் நம்பிக்கை வையுங்கள் என ரசிகர்களுக்கு ஹர்பஜன் சிங் ஆறுதல் கூறியுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் போராடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ராஸ் டைலர் 74 (80) மற்றும் வில்லியம்சன் 67 (95) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கே.எல்.ராகுலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 (25) ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் சற்று நேரம் நிலைத்து ஆடிய ரிஷாப் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அணியின் சரிவை தோனியும், ஜடேஜாவும் மெல்ல சரி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்திய ரசிகர்களுக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ‘நாம் இனிமேலும் வெல்ல முடியும். நமது வீரர்களை நம்புங்கள். அணிக்கு ஆதரவு தெரிவியுங்கள்’ என்று கூறியுள்ளார்.