239 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து - இலக்கை எட்டுமா இந்தியா ?
இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 239 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் குப்தில் 1 (14) ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து நிகோல்ஸ் 28 (51) ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் வில்லியம்சன் நிலைத்து விளையாடினர். கேப்டன் வில்லியம்சன் 67 (95) ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் டெய்லர் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து ஆடினார்.
46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் விட்ட இடத்தில் இருந்து போட்டி தொடங்கியது. 74 (90) ரன்கள் எடுத்திருந்த டெய்லர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து டாம் லதாம் 10 (11) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூஸிலாந்து அணி 239 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 240 என்ற எளிமையான இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.