இங்கிலாந்து அணி பேட்டிங் - முதல் விக்கெட்டை சாய்த்தார் ஜடேஜா
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் ஹனுமா விஹாரி, அஸ்வினுக்கு பதில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் அலெஸ்டர் குக், ஜென்னிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கடந்த நான்கு போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் விக்கெட்டை தொடக்கத்திலே எப்படியும் வீழ்த்திவிடுவார்கள். ஆனால், இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.
இதனையடுத்து, ஜடேஜாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. ஜடேஜா வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அவர் 75 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, முகமது அலி மூன்றாவது வீரராக களமிறங்கினார். உணவு இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. குக் 37(77), முகமது அலி 2(16) எடுத்தனர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 2-3 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் முனையில் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான அலெஸ்டர் குக்கிற்கு இது கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியுடன் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
முன்னதாக டாஸ் போட்ட பின்னர் பேசிய விராட் கோலி, “இந்தத் தொடர் முழுவதும் தொடக்க வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவர் நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப் உருக்க வேண்டும். அலெஸ்டர் குக் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். தொடக்க வீரராக களமிறங்கி 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது மிகவும் சிறப்பானது” என்றார்.