தோனியின் தலையில் மற்றொரு மகுடம் - 300 கேட்ச் பிடித்து சாதனை
ஒருநாள் போட்டிகளில் 300 கேட்ச் பிடித்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை மகேந்திர சிங் தோனி எட்டியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் தோனி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில், இரண்டு விக்கெட்களை கேட்ச் மூலம் வீழ்த்தினார். ஒரு விக்கெட் ரன் அவுட். 37வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பட்லரை கேட்ச் செய்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 4வது விக்கெட் கீப்பராக தோனி 300 கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் தோனிதான் 300 கேட்ச் பிடித்த முதல் வீரர்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 417 கேட்ச் பிடித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் மார்க் பவுச்சர் (402), சங்ககாரா (383) என இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 227 கேட்ச்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
முன்னதாக அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். அவர் 107 வீரர்களை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்துள்ளார். அவரை தொடர்ந்து சங்ககாரா 99 ஸ்டம்பிங் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தான், இருபது ஓவர் போட்டிகளில் 50 கேட்ச் செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இன்றைய போட்டியின் போது தோனி செய்த ரன் அவுட் மிகவும் அற்புதமான ஒன்று ஆகும். கவுல் வீசிய 50வது ஓவரின் கடைசி பந்தில் வில்லி ரன் எடுக்க முயற்சித்தார். ஆனால், பந்து பேட்டில் படாமல் தோனியிடம் சென்றது. ஆனால், வில்லி ரன் எடுக்க ஓடினார். பின்னால், இருந்த தோனி, தன்னுடைய கிளோவ்சை கழட்டிவிட்டு பந்தை ஸ்டம் நோக்கி அடித்தார். பந்து சரியாக பட வில்லி அவுட் ஆனார்.