பங்களாதேஷூக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். இது அவருக்கு 27 வது டெஸ்ட் சதம் ஆகும்.
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பகலிரவாக போட்டியாக நடைபெறும் இதில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 30.3 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 14 ரன்களிலும் ரோகித் சர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த புஜாராவும் கேப்டன் விராத் கோலியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அரைசதம் அடித்த புஜாரா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரஹானே, கோலியுடன் இணைந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 46 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தது. விராத் 59 ரன்களுடனும் ரஹானே 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய ரஹானே அரைசதம் அடித்த நிலையில் தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா, விராத்துடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய விராத் கோலி, சதம் அடித்தார். இது அவருக்கு 27 வது டெஸ்ட் சதம் ஆகும். கேப்டனாக இது அவருக்கு 20 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது.