6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி!
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் தோல்வியே கண்டிராத இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையை நேற்று எதிர்கொண்டது. டாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 85 ரன்களும் அனுஜ் ரவாத் 57 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் சிம்ரன் சிங்கும் பதோனியும் இலங்கை பந்துவீச்சாளர் களை பந்தாடினர். இதனால் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. சிம்ரன் சிங் 37 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 65 ரன்கள் சேர்த்தார். பதோனி 28 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரியுன் 52 ரன்கள் குவித்து மிரள வைத்தார். இவர்கள் இருவரும் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 79 ரன்களை திரட்டினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மதுஷ்கா பெர்னாண்டோ 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு சுழற் பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷ் தியாகி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 318 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். ஆசிய கோப்பையை இந்திய ஜூனியர் அணி வெல்வது இது 6-வது முறை.