சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ

இப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரைவிட இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள்தான் ரசிகர்களின் பேவரிட்டாக இருக்கிறது. ஆம், பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காது. அதிலும் டி20, ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகள் வேற லெவலில் இருக்கும். 2018 - 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிப் பெற்று பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வசமாக்கியது.

அதே தெம்புடன் இம்முறையும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இந்திய அணி. முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமயில் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்பு சொந்தக் காரணங்களுக்காக கோலி இந்தியா திரும்ப, தலைமைப் பொறுப்பை ஏற்றார் ரஹானே, மெல்பர்னில் சிறப்பான "கம்பேக்" கொடுத்த இந்தியா, பெரும் வெற்றியைப் பெற்று அசத்தியது.

அதன்பின்பு சிட்னியில் நடைபெற்றப் போட்டியை அஸ்வின் - விஹாரியின் பொறுப்பான பேட்டிங் மூலம் டிரா செய்து பலரது புருவத்தை உயர்த்தியது. ஆனால் இந்திய அணிக்கு காயங்கள் காரணமாக சோதனைகள் தொடர்ந்தது காயம் காரணமாக அஸ்வின், விஹாரி, பும்ரா ஆகியோர் விலக, பிரிஸ்பேன் போட்டிக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர்கள் சுந்தரும், நடராஜூம் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சரிவிலிருந்த இந்திய அணியை சுந்தரும், ஷர்துல் தாக்கூரும் அரை சதமடித்து 100 ரன்களுக்கும் மேலான பார்ட்னர்ஷிப் கொடுத்து மீட்டனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில் முகமது சிராஜ் அசத்தாக பவுலிங் செய்து 5 விக்கெட் கைப்பற்றினார், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் 328 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கியது இந்திய அணி.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். ஆனால் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா ஆஸி பவுலர்களின் பந்துவீச்சை பொறுமையுடன் விளையாடினார். புஜாராவும், சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ஆனால் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே அதிரடி காட்டினாலும் 22 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து ரிஷப் பன்ட் மற்றும் புஜாரா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 56 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 ரன்களில் மயங்க் அகர்வால் அவுட்டானதையடுத்து இந்தியாவின் சேஸிங் கனவு தகர்ந்தது என்றே பலரும் நினைத்தார்கள். இதனையடுத்து ரிஷப் பன்ட் உடன் வாஷிங்டன் சுந்தர் இறுதிக் கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் வெற்றி நெருக்கத்தில் சென்றது.

இந்த இருவருமே இந்தியாவின் வெற்றியை வசமாக்குவார்கள் என நினைத்த நிலையில் சுந்தர் 22 ரன்களில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று அவுட்டானார். ஆனால் இறுதிவரை நிலைத்து நின்றும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை வெற்றிப்பெற வைத்தார் ரிஷப் பன்ட். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்து இந்தியா வெல்ல உதவினார். இதனையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதனைப்படைத்தது.

காபா மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணிதான் வெற்றியை நிலைநாட்டியுள்ளது. கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதுதான் அந்த அணி பெற்ற முதல் தோல்வி. இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஆம், முன்னணி பவுலர்கள், ஆல் ரவுண்டர்கள் இல்லாத அணியை வைத்துக்கொண்டு வலுவான ஆஸ்திரேலியாவை காபாவில் தோற்கடிப்பதெல்லாம் அசாத்தியமானது. ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க அணியை துவம்சம் ஆக்கியவர்கள் இந்திய அணியின் புதியவர்களும் இளையவர்களும்தான் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்திய அணியின் இந்த வெற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வெரி வெரி ஸ்பெஷல்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதும் “இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழக்கும்” என சொல்லி கொக்கரித்தனர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், கிளார்க் மற்றும் மார்க் வாஹ். அதனையெல்லாம் தவிடுபொடியாக மாஸான வெற்றியை பெற்றுள்ளது ரகானே தலையிலான இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com