மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. டாஸ் வென்று தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லன்னிங் 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 135 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்ரிக்க அணி விளையாடியது. ஆனால், மழை காரணமாக அந்த அணிக்கு 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தென்னாப்ரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து. இதனால், டிஎல்எஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
முன்னதாக, இன்று சிட்டியில் நடைபெற இருந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றதற்கு இந்திய ஆடவர் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.