தவான், கோலி, ரோகித் அதிரடி ஆட்டம்: இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முரளி விஜய் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. விராட் கோலி(243) அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மேத்யூஸ், சண்டிமால் இருவரும் சதம் அடித்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருப்பினும் இலங்கை அணி 373 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜடேஜா, சமி தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இலங்கை அணி 162 ரன்கள் பின் தங்கி இருந்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், முரளி விஜய் 9, ரகானே 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகள் பறிகொடுத்தது இந்திய அணி. பின்னர் தவானும், புஜாராவும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய புஜாரா 49, தவான் 67 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த கோலி, ரோகித் சர்மா ஜோடி இலங்கை வீரர்களை பந்துகளை பதம் பார்த்தனர். கோலி 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 409 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 410 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.