இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113) மற்றும் கேப்டன் ஃபின்ச் 93 (99) ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 47 (31) ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 1 (10) மற்றும் ரோகித் ஷர்மா 14 (14) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த கோலி நிலைத்து ஆடினார். ஆனால் இடையே வந்த அம்பத்தி ராயுடு 2 (8) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தோனி கோலியுடன் சற்று நேரம் ஜோடி சேர்ந்து விளையாடி, பின்னர் 26 (42) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த கேதர் ஜாதவ் 26 (39) ரன்னில் அவுட் ஆகினார். ஆனால், நிலைத்து விளையாடிய கோலி ‘தனி ஒருவனாக’ சதம் அடித்தார். இதனையடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்ட கோலி 123(95) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த விஜய் சங்கர் ஒரளவு நிலைத்து ஆடினாலும் இறுதியில் 32(30) ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். கடைசியில் 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ்,ஜம்பா மற்றும் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.