இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 385 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் 176 ரன்களும் மயங்க் அகர்வால், 215 ரன்களும் குவித்தனர்.
பின்னர் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மார்க்ரம் 5 ரன்களிலும் தியுனிஸ் டி புருயின் 4 ரன்களிலும் அஸ்வினின் சுழலில் வீழ்ந்தனர். அடுத்து வந்த டேன் பீடிட் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பவுமா (18) விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அடுத்து கேப்டன் டுபிளிசிஸ், தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் அடித்திருந்த டுபிளிசிசை, அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 55 எடுத்து பெவிலி யன் திரும்பினார். பின்னர் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், எல்கருடன் இணைந்து ஆடினார். பொறுமையாக ஆடிய எல்கர், அபார சதம் அடித்தார். எல்கர் 160 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் சதம் அடித்தார். அவர் 111 ரன்கள் அடித்திருக்கும் போது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பிலாண்டர் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது. சென்னுரான் முத்துசாமி 12 ரன்களுடனும், கேசவ் மகாராஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியைவிட 117 ரன்கள் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.