ஐபிஎல் தொடரில் சரியாக விளையாட முடியாவிட்டால் தோனி விடைபெற்றுக் கொள்வார் - ரவிசாஸ்திரி சூசகம்
இந்திய அணியில் மீண்டும் தோனி விளையாடுவதற்கு, ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்தத்திலும் தோனி பெயர் இல்லை. அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ஸ்போர்ட் ஸ்டார்-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தோனியின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், “ஐபிஎல் தொடர் வரவுள்ளது. எல்லோருக்கும் இது தெரியும். அவருக்கும் தெரியும், தேர்வாளர்களுக்கும் தெரியும். கேப்டன் விராட் கோலியும் அவரது பேட்டிங்கை காண்பார். எல்லாவற்றையும் விட தோனிக்கே அது தெரியும். எல்லோருக்கு நான் சொல்வது என்னவென்றால், அவர்தான் தன்னுடைய ஆடும் திறனை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அவரைப்பற்றி உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
அவர் மிகவும் நேர்மையானவர். தன்னால் விளையாட விளையாட முடியாத போது டெஸ்ட் போட்டிகளை கைவிட்டார். 100 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்ய வேண்டும் என அவர் நினைக்கவில்லை. அவர் தன்னுடைய பயிற்சியை தொடங்கிவிட்டாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் முனைப்புடன் விளையாடுவார் என நான் நினைக்கிறேன். அவர் தயாராகவே உள்ளார். நம் எல்லோருக்கும் தெரியும், ஐபிஎல் தொடரில் சரியாக விளையாட முடியவில்லை என்றால், அவர் ‘தேங்க் யு வெரி மச்’ என்று கூறிவிடுவார்” என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.